வெள்ளி, 15 அக்டோபர், 2021

மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறை வேண்டும்

மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறை வேண்டும்
மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறை வேண்டும்


முன்னுரை:

இந்த கட்டுரையை இந்த மனித சமூகத்தை உண்மையாகவே நேசிக்கும் நல்உள்ளங்களுக்கும்,வரும்கால சமூகத்தை அழிவின் பாதையிலிருந்து காப்பதற்கு ஆசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அற்பனிக்கின்றேன். குறிப்பாக இந்த உலகையும் இந்த உலகில் கொஞ்சி மகிழப்பட வேண்டிய இயற்கையையும் பாதுகாக்க விரும்புபவர்களுக்கும் இந்த கட்டுரையை அற்பனம் செய்கின்றேன்.

மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறையே தீர்வு.

இன்றைக்கு மனிதர்களின் மேம்பட்ட வாழ்விற்கும் மேலும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருப்பதே கல்விதான் என்பதை அறிந்துகொண்ட பெரும்பான்மையான நாடுகள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை கட்டாயமாகவும் இலவசமாகவும் கற்பிக்கும் நிலையை உறுவாக்கி இருப்பது என்பது இந்த மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கான சிறந்த முன்னேற்பாடு என்பதில் அனைவரும் திருப்திகொள்ள கடமை பட்டிருக்கின்றோம்.ஏனெனில் கல்வியற்ற சமூகம் என்பது இந்த மனித சமூகத்தையே பேரழிவில் தள்ளிவிடச்செய்துவிடும் ஆபத்து நிறைந்தது என்பதை முந்தைய வரலாறுகளின் மூலம் நம்மால் தெள்ளத்தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகின்றது.என்றாலும் இன்றைய கல்விமுறையை அடிப்படையாகக்கொண்ட தற்போதைய சமூகம் இந்த மனித சமூகத்தை இன்னும் விரைவாக அழிவில் தள்ளிவிடுமோ என்ற அச்சம் எழுகின்றது. ஏனெனில் இன்றைய கல்விமுறையே அத்தகைய சூழலை உறுவாக்கி கொடுப்பதாக உணர முடிகின்றது.

அதாவது இன்றைக்கு குழந்தைகளுக்கு இயந்திரத்தனமான பொருளை தேடுவதற்கான கல்வியை மட்டுமே கட்டாய கல்வியாக தினிக்கப்படுவது என்பது ஒரு கட்டத்தில் இந்த மனித சமூகம் தன் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வையும் ,தன்னை சுற்றியுள்ள மனிதர்கள் மற்றும் இயற்கைகளை மறந்து பாழ்படுத்துவதற்கான வழிவகைகளை செய்துவிடும் என்பதையே இங்கு நான் அவ்வாறு கூறுகின்றேன்.இன்றைக்கு பல்வேறு நாடுகளும் சுற்றுச் சூழல் மாசுபட்டுவிட்டது என்றும் இந்த பூமி அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்றும் கூப்பாடுபோடுவதோடு மனிதர்கள் இந்த இயற்கையை காக்கத்தவறுகின்றனர் என்பதாக குற்றமும் சாட்டுகின்றனர். ஆனால் அவர்கள்தான் அத்தகைய நிலைக்கு காரணமாக இருக்கின்றனர் என்பதை மறந்துவிட்டனர் என்பதை இங்கு நான் வருத்தத்தோடு பதிவு செய்ய கடமைபட்டுள்ளேன்.

அதாவது இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதிக்கப்படும் பெரும்பான்மையான கல்விகள் மனித வாழ்வை மெறுகூட்டும் கலைகள் என்பதை கடந்து பணத்தையும் பொருளாதாரத்தயும் அடைவதற்கான வழிகளாக அரசே அமைத்து வைத்துவிட்டு பிறகு நாட்டில் மனிதவளத்தையும் இயற்கை வளத்தையும் எதிர்பார்ப்பது என்பது எவ்வளவு பெறிய அறியாமை என்பதை இன்றைய அரசுகள் உணர வேண்டும்.

மேலும் மனிதர்கள் இந்த உலகில் நிம்மதியாகவும் ,மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்குத்தான் கல்வி,பொருளாதாரம்,நாட்டின் வளங்கள் என்பவையெல்லாம் அரசே மனிதர்களுக்கு  மறக்கடித்துவிட்டு அச்சடிக்கப்பட்ட நோட்டுகளின் பின்னால் அவர்களை ஓடவும் விட்டுவிட்டு, இன்றைய மனித சமூகம் இந்த உலகை சூரையாடுகின்றது என்று கூப்பாடு போடுவது என்பது வடிகட்டிய மடமையன்றி வேறென்ன..?மனிதர்களின் வாழ்வியலை சீர்கெடுக்கும் அத்துனை வழிகளையும் நாமே திறந்து வைத்துவிட்டு மனிதர்கள் அதில் சென்று அழிகின்றார்கள் என்பது எவ்வளவு பெரிய அறியாமை..?

எனவே இந்த மனித சமூகத்தை உண்மையிலேயே மேம்படுத்தத் துடிப்பவர்களும்,இந்த உலகின் இயற்கையை காக்கத்துடிப்பவர்களும் ஆரம்பம் முதலே இந்த மனிதனுக்கு அடிப்படை கல்வியாக இந்த உலகில் யாருக்கும் தொல்லையின்றி மகிழ்ச்சியாக தன்னை நேசிக்கவும் தன்னை சுற்றி இருப்பவர்களை நேசிக்கவும் மேலும் இந்த எழில் கொஞ்சும் இயற்கையை நேசிக்கவும் போதிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதையே என்னுடைய தாழ்வான வேண்டுகோளாக இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகின்றேன்.

மேலும் மனிதவாழ்விற்கு பல்வேறு திருப்திகளை தரும் கலைகளை அற்ப வியாபாரம் ஆக்குவதை விடுத்துவிட்டு அதை மனிதர்களை மேம்படுத்தும் கலைகளாகவும்,மனிதர்களை உற்சாகமூட்டும் திறன்கலாகவும் போற்றப்படுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்பதையும் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.அவ்வாறு இல்லையெனில் நிச்சயமாக இந்த உலகில் மனித வாழ்வில் பெருந்துன்பங்களும், குற்றங்கலும்,இயற்கை சீரழிவுகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்குமே தவிர இவ்வுலகில் எவ்வித முன்னேற்றங்களும் நடந்தேறிவிடாது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்பதை நினைவுபடுத்திக் கொண்டு கட்டுரையின் முடிவுக்கு வருகின்றேன்.

முடிவுரை:

இன்றைக்கு கல்வி என்ற பெயரில் மனித வாழ்விற்கு பெரிதும் பயன்தரக்கூடிய பல்வேறு கலைகள் வியாபாரமாக்கப்பட்டிருப்பது நாமெல்லாம் அறிந்த உண்மையே ஆகும்.அவ்வாறே மனிதர்களுக்கு எக்காலமும் பயன்தரக்கூடிய இந்த உலகின் இயற்கைகளும் மிகப்பெரும் வியாபாரமாக்கப்பட்டிருப்பதும் நாம் அறிந்த உண்மையே ஆகும்.அதன் விளைவாக இன்றைக்கு உலகம் மிகப்பெரும் ஆபத்தை சந்தித்துவருவதும் நாம் அறிந்த உண்மையே ஆகும்.

இதற்கு தீர்வுகாண வேண்டுமெனில் நாம் நம்முடைய கல்விமுறையை வியாபார நோக்கமாக மட்டும் ஆக்குவதை விடுத்துவிட்டு மகிழ்ச்சியான மனித வாழ்வை போதிப்பதற்கானதாக ஆக்கவேண்டும்.அல்லது பொருளாதார கல்வியை போதிப்பதோடு மனித வாழ்வியலை மகிழ்வாக்கிக் கொள்ளுவதற்கும் மேலும் இயற்கையை நேசிப்பதற்குமான ஒரு பாடத்திட்டத்தையேனும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அவ்வாறு நாம் செய்யவில்லையெனில் இந்த மனித சமூகத்தின் அழிவு வெகு தூரத்தில் இல்லை என்பதை மிக வருத்தத்தோடு இங்கு நினைவூட்டிக் கொள்கின்றேன்.

நன்றி

வியாழன், 7 அக்டோபர், 2021

பெரியாரும் விவாகரத்துச் சட்டமும்

பெரியாரைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் பலராலும் பரப்பப்பட்டுவரும் நிலையிலும் அவர் இந்த தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பல்வேறு நலவுகளையும்,தொண்டுகளையும் நடுநிலை கண்ணோட்டத்துடன் என்னுடைய கட்டுரைகளில் தொடர்ந்து குறிப்பிட்டுவருகின்றேன்.குறிப்பாக ஒரு சுதந்திரமான மனோநிலையில் மனிதர்களின் வாழ்வியலை போதிக்கும் ஒரு  சிறந்த ஆசானாகவே அவர் தன் வாழ்வை அமைத்துக்கொண்டிருப்பதை அவருடைய எழுத்துக்களும் பிரச்சாரங்களும் பிரதிபளிப்பதை காணும் பொழுது அத்தகைய சிறந்த மனிதரின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

இந்த கட்டுரை முழுவதும் பெரியார் தன்னுடைய குடியரசு பத்திரிக்கையில் "விவாகரத்து சட்டத்தை இந்தியாவில் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி "கல்யாண விடுதலை"என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையாகும்.இது நிச்சயம் எல்லோருக்கும் பயனலிப்பதாக இருக்கும் என்றே ஆதரவு வைத்து பதிவிடுகின்றேன்.

(குறிப்பு:இவற்றில் சில கருத்துக்களை புரிவதற்காக நானே எளிய சில வார்த்தைகளையும் சேர்த்து இருக்கின்றேன் என்பதை இங்கு உங்கள் கவனத்திற்கு விட்டுவிடுகின்றேன்.)"ஆண்,பெண் கல்யாண விஷயத்தில் அதாவது கணவன் மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப்போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம்.நமது கல்யாண தத்துவத்தையெல்லாம் சுறுக்கமாக பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாக்கிக்கொள்வதை தவிர வேறொன்றுமே அதில் இல்லை.அவ்வடிமைத்தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்துக்கு தெய்வீக கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்றப் போலிப் பெயரையும் கொடுத்து பெண்களை வஞ்சிக்கிறோம்.

பொதுவாக கவனித்தால் நமது நாடு மட்டுமல்லாமல் உலகத்திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்க கொடுமையும் ,இயற்கைக்கு விரோதமான நிர்பந்தமும்படுத்தப்படுகிறார்கள் என்பதை நடு நிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது.ஆனால் நம் நாடு இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாடுகளையும் விட மிக மோசமானதாகவே இருந்து வருகின்றது. 

இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலைபெற்று வருமானால் சமீப காலத்திற்குள்ளாக அதாவது ஒரு அரை நூற்றாண்டிற்குள்ளாக கல்யாணம் என்பதும் ,உறவு முறை என்பதும் அனேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.இதை அறிந்தே மற்ற நாடுகளில் அறிஞர்கள் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் கொடுமைகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே வருகின்றனர்.ஆனால் நம் நாடு மாத்திரம் குரங்குபிடியாய் பழைய கருப்பனாகவே இருந்து வருகின்றது.ஆகவே முறையாக நமது நாட்டில் பெண்களின் ஒரு கிளர்ச்சி ஏற்பட வேண்டிய அவசியமிருக்கின்றது.

சென்ற வருடம் செங்கல் பட்டு மாநாட்டில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் விவாகரத்து செய்யும் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் செய்யப்பட்டவுடன் மேலும் சமீபத்தில் சென்னையில் கூடிய பெண்கள் மாநாட்டில் கல்யாண ரத்துக்கு ஒரு சட்டம் வேண்டும் என்று தீர்மானித்தவுடன் உலகமே முழுகிவிட்டதாக சீர்திருத்தவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுபவர்கள் உட்பட பலர் கூக்குரலிட்டார்கள். ஆனால் செங்கல்பட்டு மாநாட்டிற்கு பிறகு இந்தியாவிலேயே பல இடங்களில் கல்யாண ரத்து சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

ரஷ்யாவில் கல்யாணம் என்பது ஒரு நாள் ஒப்பந்தமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.ஜெர்மனியில் கணவன் மனைவிக்கு விருப்பமில்லையானால் காரணம் சொல்லாமலே கல்யாணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்பதாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது யாவருக்கும் தெரிந்த விஷயமேயாகும். சமீபத்தில் பரோடா அரசாங்கத்தினரும் கல்யாண ரத்துக்குச் சட்டம் இயற்றிவிட்டார்கள்.மற்ற மேல் நாடுகளிலும் இவ்விதச் சட்டங்கள் நடைமுறையில் இருந்துதான் வருகின்றது.ஆனால் நமது நாட்டில் மட்டும் இவ்விஷயத்தில் சட்டம் கொண்டுவராமல் இருப்பது மிகவும் அறிவீனமான காரியம் என்றே சொல்ல வேண்டும்.

சாதாரணமாக தென்னாட்டில் பத்திரிக்கைகள் மூலம் அனேக கனவர்கள் தங்களது மனைவிகளின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலைகள் செய்வதாக தினம் தினம் செய்திகள் வெளியாவதை பார்த்து வருகின்றோம். சில சமயங்களில் மனைவிகளின் நடத்தையில் சந்தேகத்தின் காரணமாகவே பல்வேறு கொலைகள் நடப்பதையும் பார்க்கின்றோம்.ஆனால் இந்த சீர்திருத்தவாதிகளான பிடிவாதக்காரர்களிடம் தெய்வீகம் சார்ந்த இந்த கல்யாணம் இப்படி கொலைகளில் முடிகின்றதே என்று கவலைப்பட எவ்வித புத்தியும் இன்னும் தென்படவில்லை.

"பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் அவர்களுக்கு மனிதத்தன்மை ஏற்பட வேண்டுமானால் அவ்வாறே ஆண்களுக்கும் திருப்தியும் ,இன்பமும் ,உண்மையான காதலும்,ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு இடமளிக்கப்பட வேண்டியது மிக முக்கியமான காரியமாகும்.அப்படி இல்லாதவரை ஆண்,பெண் இருவருக்கும் சுதந்திரமான வாழ்க்கை என்பதற்கு இடமே இல்லாமல் போய்விடும்.

இங்கு தங்களை சீர்திருத்தவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களைப் பார்த்து நாம் ஒன்று கேட்கவும் விரும்புகின்றோம்."கல்யாணம் என்பது மனிதனின் இன்பத்திற்கும் திருப்திக்குமா.?அல்லது வெறுமனே சடங்கிற்காக மட்டுமா..?என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

அது அவர்களால் முடியாது...!

எனவே தெய்வீகம் எங்கின்ற பெயரைச் சொல்லிக் கொண்டு கணவனுக்கும் மனைவிக்கும் விருப்பமே இல்லாமலும் எவ்வித அறிமுகமும் இல்லாத உறவில் நிலைத்திருக்கும் படியும் வற்புறுத்தப்படுவதால் மனிதர்களுக்கு ஏற்படுத்தப்படும் துன்பம் ஒழிக்கப்பட வேண்டும்.மனிதன் ஏன் பிறந்தான் ஏன் சாகின்றான் என்பது வேறு விஷயம்.அது ஒருபுறமிருக்க மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியும் தான்.அதற்கு ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனமாக இருக்கின்றனர் என்பதே நிதர்சனமாகும்.

அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான இடையூரு இருக்குமானால் அதை முதலில் கலைந்தெறிய வேண்டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும்.மனித ஜீவ கோடிகளின் திருப்திக்கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதனைத்தான் முதலில் செய்ய வேண்டும்.இதைவிடுத்து கல்யாணம் செய்துவிட்டோமே என்பதற்காக சகித்துக் கொண்டுதான் வாழவேண்டும் என்று கருதி துன்பத்தையும் ,அதிருப்தியையும் அனுபவிப்பதும்,அனுபவிக்கச் செய்வதும் மனிதத் தன்மையும் ,சுய மரியாதையுமற்ற தன்மையுமேயாகும் என்பதே நமது அபிப்பிராயமாகும்.

புதன், 6 அக்டோபர், 2021

யார் நல்லவர் ?யார் கெட்டவர்?(Who is good and who is bad)


யூதர்களின் ஒரு சுவாரஸ்யமான கதை..!

ஒரு கோபக்கார கடவுள் ஒரு நகரத்தில் அங்குள்ள மக்களெல்லாம் மிக மோசமானவர்களாக இருக்கின்றனர் என்பதற்காக அந்த நகரத்தையே அழிக்கப்போவதாக முடிவெடுத்தார்.அப்படி அழிப்பதற்கு முன்பு அங்கு வசித்துவந்த தனக்குப்பிடித்தமான ஒரு துறவியை அழைத்து இந்த நகரத்தை நான் அழிக்கப்போகின்றேன் எனவே நீங்கள் அங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று கூறினார்.

இதனை கேள்விபட்ட துறவி சற்று யோசித்துவிட்டு கடவுளே நீங்கள் அழிக்கவிருக்கும் அந்த நகரத்தில் ஆயிரம் தீயவர்கள் இருக்கின்றார்கள் என்பது உண்மை என்றாலும் நூறு நல்லவர்களும் இருக்கின்றனரே அதனை என்ன செய்ய இருக்கின்றீர்கள் என்றார்...!உடனே கடவுளும் ஆமாம் இதனைப் பற்றி நான் யோசிக்கவே இல்லையே நல்லவேலை கூறினாய்..! சரி அங்கு யார் அந்த நூறு நபர்கள என்பதை எனக்கு காட்டு நான் அவர்களுக்காக அவ்வூரை விட்டுவிடுகின்றேன் என்றார்.அதற்கு துறவி கடவுளே சற்று பொறுங்கள்..

அங்கு நூறு நல்ல நபர்கள் இருப்பார்களா என்பது எனக்கு தெறியாது ஆனால் அங்கு பத்து நபர்கள் நல்லவர்களாக இருந்தால் அவ்வூரை என்ன செய்வீர்கள் என்றார்.கடவுளோ அங்கு நூரோ பத்தோ எண்ணிக்கை முக்கியமல்ல அங்கு நல்லவர்கள் இருக்கின்றார்கள் என்பதை எனக்கு நிறூபி நான் அந்த ஊரை விட்டுவிடுகின்றேன் என்றார்.

உடனே துறவி கடவுளே என்னால் என்னை தவிர வேறு யாருக்கும் பொறுப்பேற்க முடியாது.நான் என்று நல்லவனாக ஆனேனோ அன்றிலிருந்து யாரையும் நல்லவன் கெட்டவன் என்று பிறித்துப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். என்னைப் பொறுத்த வரை எல்லோரும் நல்லவர்களே.நான் யாரிடமும் கெட்ட தனத்தை பார்ப்பதில்லை.ஏனெனில் கெட்ட தன்மை என்பது ஒரு நிழல் போன்றது.அது ஒரு மனிதனின் உண்மை தன்மை ஆகாது என்பதே எனது எண்ணம்.

கெடுதல் உண்டாக்கும் செயலை ஒருவன் செய்திருக்கலாம் ஆனால் அது அவனுடைய இருப்பையே கெட்டதாக்கிவிட முடியாது என்றே நான் கருதுகின்றேன்.ஒருவன் ஒரு கெட்ட செயல் அல்லது இரு கெட்ட செயல் அல்லது நூறு கெட்ட செயல்கள் கூட செய்திருக்கலாம் ஆனால் அது அவனது இருப்பை ஒருபோதும் கெடுப்பது இல்லை.அவனுடைய இருப்பு எப்பொழுதும் தூய்மையாகவே உள்ளது .ஏனெனில் இருப்பு என்பது ஒருவனை அச்செயலை விட்டும் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றிவிடும்.அது அவனது கடந்த காலத்தையும் கூட கடக்கச்செய்துவிடும்.எனவே நிரந்தரமற்ற அவனது செயலை வைத்து அவனது இருப்பை எவ்வாறு தீயவன் என்றோ அல்லது நல்லவன் என்றோ முடிவு செய்ய முடியும்..?

எனவே கடவுளே நான் அந்த நகரத்தில் தான் வசிக்கின்றேன் பலரும் அங்கு நல்லவர்கள்தான் என்று என்னால் உறுதியாக கூற முடியாது என்றாலும் அவர்கள் நற்செயல்களும் செய்யவே செய்கின்றனர் என்றார்.அதனை கேட்ட கடவுள்.அந்த நகரத்தை அழிக்க வேண்டும் என்ற முடிவை மாற்றிக் கொண்டார் என்பதாக அக்கதை முடிகின்றது.

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்..?(Monk story with a king)

ஒரு நாட்டின் அரசன் மிக பயபக்தியானவர்.அவர் எப்பொழுதும் இரவு நேரத்தில் மாறுவேடத்தில் மக்களின் நிலையை அறிவதற்காக நகர்வளம் செல்வதுண்டு.அப்படி அவர் செல்கையில் தினமும் ஒரு வாலிபன் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துகொண்டு செல்வார்.ஒரு நாள் ஆர்வமிகுதியால் தன் குதிரையை விட்டும் இறங்கி அவ்வாலிபனிடம் சென்றார்.

"வாலிபனே நான் உன் தியானத்தை கலைத்தற்காக மன்னித்து விடு என்றார்.வாலிபனோ தன் கண்களை மெல்லமாக திறந்து "இல்லை நான் தியானம் செய்வதில்லை அது எப்பொழுதும் என்னுடன் தான் இருக்கின்றது , அது எப்பொழுதும் என்னைவிட்டும் கலைவதில்லை எனவே நீங்கள் மன்னிப்பு வேண்டவேண்டிய எந்த அவசியமுமில்லை ஏன் அழைத்தீர்கள் என்று சொல்லுங்கள் என்றார்.அரசன் " நான்தான் இந்நாட்டின் அரசன்.என்னுடைய அரன்மனைக்கு நீங்கள் வந்துவிடுங்கள்.அங்கு நான் உங்களை நன்றாக பார்த்துக்கொள்கின்றேன்.நீங்கள் இந்த மரத்தடியில் அமர்ந்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.உங்களுடைய தவத்தாலும்,ஒளியாலும், அமைதியினாலும் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுவிட்டேன்.எனவே தயவு கூர்ந்து என்னுடன் வந்துவிடுங்கள் என்றார்.

(உண்மையில் அந்த துறவி தன் அழைப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றே அரசர் விரும்பினார்.ஏனென்றால் துறவி அதனை ஏற்றுவிட்டால் அவர் அரன்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்பிதான் இருந்திருக்கின்றார் என்று ஆகிவிடும் என்று பயந்தார்.)ஆனால் அந்த வாலிபர் எழுந்து போகலாம் என்றார்.

அப்போது அரசருடைய மனம் முழுவதும் ஒரு வெள்ளப்பிரலயமே ஓங்கி வீசுகின்றது."இவர் அரன்மணையில் உள்ள சுகபோகங்களை அனுபவிப்பதற்கு விரும்புகின்றார்போல் தெரிகின்றதே,அப்படியானால் இவர் உண்மையான துறவி இல்லைபோல் தெரிகின்றது.ஏனென்றால் துறவிகள் என்பவர்கள் தங்களை வருத்தி கொள்பவர்கள்தான் என்று அவர் புரிந்து வைத்திருந்தார். ஆனால் இந்த வாலிபர் அரன்மணையை விரும்புகின்றாரே என்பதை கண்டு இவர் ஒரு போலி துறவி என்றே முடிவெடுத்துக் கொள்கின்றார்.

ஆனாலும் வார்த்தை மாறமுடியாதே என்பதற்காக வேறுவழியின்றி வாலிபரை அரன்மணைக்கு அழைத்து செல்கின்றார்.அங்குள்ள பிரத்யேக அறையை அவருக்காக தயார்செய்தும் கொடுத்தார்.மேலும் பணியாட்களையும் அழகிய அந்தபுறப் பெண்களையும் அனுப்பி வைத்தார்.வாலிபர் இவற்றில் எதனையும் மறுக்கவில்லை.அனைத்தையும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்.அரசனின் எண்ணம் இன்னும் வலுப்பெற்றது.இந்த வாலிபன் என்னை ஏமாற்றிவிட்டான். நான் கடந்துசெல்லும் இடத்தை சரியாக கண்டுபிடித்து என்னிடம் அவன் தியானம் செய்வதுபோல் நடித்து ஏமாற்றிவிட்டான் என்று மனதுக்குள்ளேயே முடிவெடுத்துக் கொண்டார்.

இதே எண்ணத்தோடே அரசர் சில நாட்களை பல்லை கடித்துக்கொண்டு கடந்தார் என்றாலும் அவற்றை எல்லாம் போட்டு உடைப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.அப்படி ஒரு நாளும் வந்தது.ஆம்..!
ஒரு நாள் துறவியும் அரசரும் ஒரு இடத்தில் அமர்ந்து தேநீர் அருந்தும் சூழல் ஏற்பட்டது.அப்பொழுது இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி வாலிபரே உங்களிடம் நான் ஒரு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள ஆசிக்கின்றேன் என்றார்.துறவியும் கேளுங்கள் என்றார்.

அரசர் சற்று தயக்கத்துடனே இதை நான் கேட்க விரும்பவில்லை என்றாலும் என் பாலாய்ப்போன மனம் அதனை உறுத்திக் கொண்டே இருக்கின்றது எனவேதான் நான் இதை கேட்கின்றேன் என்றார்.துறவி பரவாயில்லை கேளுங்கள் என்றார்...!அரசர்"உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன..?"தயவு செய்து எனக்கு விளக்கம் கூறுங்கள்.ஏனெனில் நான் அனுபவிக்கும் அனைத்தையும் நீங்களும் அனுபவிக்கின்றீர்கள் அப்படியானால் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன என்று சற்று விரப்புடனே கேட்டார்.

அதற்கு அந்த வாலிப துறவியோ இந்த சந்தேகம் "நான் உன் அரன்மணைக்கு வருவதாக ஒப்புக்கொண்டபோதே உன்னிடம் தோன்றிவிட்டது என்பதை நான் நன்றாக அறிவேன்.ஆனாலும் நீர் ஒரு கோழை.அன்றே இந்த கேள்வியை கேட்டிருந்தால் உன் மனம் நிம்மதியாக இருந்திருக்கும்.சரி இப்பொழுதாவது கேட்டாயே..! என்று கூறி விட்டு, இந்த கேள்விக்கு விடை இதோ இந்த ஆற்றை கடந்தால் மட்டுமே பெற முடியும் என்றார்.

அரசரோ அப்படியா அப்படியானால் நாம் அந்த பக்கமாக போகும்பொழுது அதனை பெற்றுக்கொள்வோம் என்றார்.ஆனால் துறவியோ அது இப்பொழுதே போனால் மட்டுமே கிடைக்கும்.எனவே என்னோடு ஆற்றைக் கடந்து வாருங்கள் என்றார்.இருவரும் ஆற்றைக் கடந்து ஒரு காட்டை வந்தைடைந்தனர்.அப்பொழுது துறவி இந்த காட்டிலேயே நான் அமர்ந்து தவம் செய்யப்போகின்றேன் எனவே நீங்கள் விரும்பினால் என்னோடு இருக்கலாம் இல்லையானால் நீங்கள் போகலாம் என்றார்.

அரசனோ நான் எப்படி உங்களோடு இருப்பது என்னை நம்பி ஒரு நாடு இருக்கின்றது.மேலும் எனக்கான பொறுப்புகளும் கடமைகளும் ஏறாலமாக அங்கு காத்திருக்கின்றது.எனவே என்னால் எப்படி உங்களோடு வர முடியும் என்றார்.அப்பொழுது துறவி "இது தான் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் என்றார்.நான் ஒரு துறவி நேற்று போல் எனக்கு இன்று இல்லை.இன்று போல் எனக்கு நாளை இல்லை.எனவே நான் காட்டில் அமர்ந்திருந்தாலும் என் மனம் ஒரே மாதிரிதான் இருக்கும்.அரன்மணையில் அமர்ந்திருந்தாலும் என் மனம் ஒரே மாதிரிதான் இருக்கும்.ஆனால் உங்கள் நிலை அப்படிப்பட்டதில்லை. எனவே நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் நான் இனி உங்கள் அரன்மனைக்கு வரப்போவதில்லை என்றார்.

அதற்கு அரசனோ இல்லை இல்லை நான் உங்களை தவறாக எண்ணிவிட்டேன் தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்.நீங்கள் என் அரன்மணைக்கு கட்டாயம் என்னோடு வந்தேயாக வேண்டும் என்று துறவியின் காலில் விழுந்து மன்னிப்பு  வேண்டினார்.ஆனால் துறவியோ இல்லை நான் உங்களோடு இப்பொழுது வந்தாலும் உங்கள் மனம் என்றாவது ஒரு நாள் திரும்பவும் அதே கேள்வியை தோற்றுவிக்கும்.எனவே நான் உங்கள் மன அமைதியை கெடுக்க விரும்பவில்லை.எனவே நான் திரும்பி வருவதை நீங்கள் எதிர்பார்க்காதீர்கள் எனக்கு இந்த உலகில் ஒரு மரத்தின் நிழல் போதும் என்று உறுதியாக கூறிவிட்டார்.

நீதி:

  •  பிறரைப்பற்றிய நம் எண்ணங்கள் பல சமயங்களில் தவறாகவே அமைந்துவிடும்.
  • யாரையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
  • இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலை உள்ளது.
  • இந்த உலகத்தில் ஒரு மரத்தின் நிழலே பெரும் மகிழ்ச்சிக்கு போதுமானது.

வெள்ளி, 1 அக்டோபர், 2021

இறைச்சி உண்பது குற்றமா? Is Eating meat a sin?

முன்னுரை:

இன்று உலகில் பல நூறு கோடி மக்கள் ஒரு வேலை உணவிற்காக பசியிலும்,பஞ்சத்திலும் வாடிக்கொண்டிருக்கும் அதே நிலையில் மற்றொரு புறம் யாருடைய உணவு கலாச்சாரம் சிறந்தது என்று மிகப்பெரும் கலாச்சார போரே நடந்துகொண்டிருப்பது என்பது இந்த மனித சமூகத்தின் மீது வீசப்பட்ட சாபம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.மனிதன் உயிர் வாழ்வதற்கும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்வதற்கும் உணவு உட்கொண்ட காலம் கடந்து இப்பொழுது தன் இன,மத,கலாச்சார பெருமையை நிலை நாட்ட மட்டுமே உணவு உட்கொள்ளும் இழிநிலைக்கு தள்ளப்பட்டிருப்பது உண்மையில் காலத்தின் கொடுமையாகவே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் இன்று மனிதர்கள் சாப்பிடுவதிலும் கூட தங்களின் சுதந்திரங்களை இழந்து தங்களுக்கு பிடித்தமானதையும் கூட எவ்வித அறிவுப்பூர்வமான அடிப்படைகளுமற்ற கலாச்சார  வெளியுலகிற்காக மட்டுமே இது எனக்கு பிடிக்காது என்றும்,தனக்கு பிடிக்காததையும் கூட இந்த போலி உணவு கலாச்சார வெளியுலகிற்காக இது எனக்கு பிடித்தது என்றும் கூறி தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்வதை வெளிப்படையாகவே நம்மால் காண முடிகின்றது.

எனவே கலாச்சார அல்லது மத அடிப்படையிலான உணவு எப்படி தோன்றியது என்பது சம்மந்தமாகவும் நாம் சுதந்திரமான ஆரோக்கியமிக்க உணவு முறையை எப்படி தேர்ந்தெடுத்துக்கொள்வது என்பது சம்மந்தமாகவும் இந்த கட்டுரையில் விரிவாக விளக்கி இருக்கின்றேன்.நீங்களும் வாசித்து பயன்பெறுவதோடு ஏனைய நண்பர்களுக்கும் இதனை எத்தி வைக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

உணவு கலாச்சாரம் எப்படி தோன்றியது?

மனிதனின் உணவு கலாச்சாரத்தில் கற்காலம் தொட்டு இக்காலம் வரை மாமிசம் என்பது ஒரு முக்கிய அங்கம் வகித்திருப்பதாகவே நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.இன்னும் சொல்லப்போனால் பல்வேறு பகுதிகளில் கால் நடைகள் அல்லது மீன்கள் போன்ற மாமிசத்தை உண்டாலே தவிர உயிர் வாழவே முடியாது என்ற நிலை அன்றிலிருந்து இன்று வரை இருக்கக்கூடிய நாடுகளையும் பகுதிகளையும் நம்மால் காண முடிகின்றது. அங்கெல்லாம் ஏனைய தாணிய மற்றும் காய்கறி உணவுகள் விளைவது கிடையாது என்பதே அங்கு மாமிசம் மட்டுமே பிரத்தியேக உணவாக ஆனதற்கு முக்கிய காரணியாகவும் பார்க்கப்படுகின்றது என்பதும் கவனிக்க தக்கதாகும்.

இந்தியா போன்ற சில நாடுகளில் தாணிய,காய்கறி உணவுகளும் மாமிச உணவுகளும் பெரும்பாலும் சமமான நிலையில் கிடைக்கப்பெற்றதால்  இப்பகுதியில் வாழும் பெரும்பான்மையான மக்கள் இரண்டையும் உண்ணுபவர்களாகவே இருந்திருக்கின்றனர் என்றே நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.குறிப்பாக இந்தியாவிற்குள்ளேயே பகுதிகளுக்கு தகுந்தவாறு  உணவு  பழக்க வழக்கங்கள் வேறுபட்டு இருந்ததாகவும் நம்மால் காண முடிகின்றது.

உதாரணமாக தெற்குப் பகுதியில் இருப்பவர்களுக்கு அரிசி விளைச்சல் அதிகமாக காணப்பட்டதால் அரிசியை மட்டுமே அவர்கள் தங்கள் பிரத்யேக உணவாகவும் வடக்கில் உள்ளவர்களுக்கு கோதுமையின் விளைச்சல் அதிகமாக காணப்பட்டதால் கோதுமையையே அவர்கள் தங்கள் பிரத்யேக உணவாகவும் ஆக்கிக்கொண்டுவிட்டனர் என்பதாகவே நம்மால் வரலாற்றின் மூலம் புரிந்துகொள்ளமுடிகின்றது.மேலும் ஆசிய கண்டத்தின் சில பகுதிகளில் சோழம் மற்றும் பருப்பு வகையிலான தாணியங்கள் பிரத்யேக உணவாக பார்க்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆக இந்த உலகில் ஒவ்வொரு பகுதிகளுக்கு தகுந்தவாறும் ஒவ்வொரு பகுதியிலுமுள்ள சீதோஷன நிலைக்கு தகுந்தவாறுமே மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் அமைந்திருந்ததே தவிர அங்கு மத அடிப்படையிலான உணவு என்று கூறுவதற்கோ அல்லது கலாச்சார அடிப்படையிலான உணவு என்று கூறுவதற்கோ எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றே இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

எனவே உணவு கலாச்சாரம் என்பது அந்தந்த பகுதிகளை கவனித்தும் அங்குள்ள சீதோஷன நிலையை கவனித்துமே இருந்தது என்பதை நாம் ஆழமாக உணர்ந்து கொண்டாலே போதுமானது.இன்றைய பெரும் பான்மையான கலாச்சார பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு கண்டுவிட முடியும் என்றே நான் கருதுகின்றேன்.அடுத்தபடியாக எத்தகைய உணவுமுறை சிறந்து என்பதில் மக்களிடம் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் அது சம்மந்தமான ஒரு சில விளக்கங்களையும் இங்கு நாம் பார்த்துவிடுவோம்.

எத்தகைய உணவு முறையை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்?

என்னுடைய "முழுமை பெற்ற மனிதனாக இரு "என்ற புத்தகத்தில் ஆரோக்கியமே ஒரு மனிதனை முழுமை பெறச் செய்கின்றது என்ற தலைப்பின் கீழ் உணவு பழக்க வழக்கம் சம்மந்தமாக விரிவாக எழுதி இருக்கின்றேன்.முடிந்தால் அவற்றை ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டு அவற்றில் முக்கியமான கருத்தை மட்டும் இங்கு பதிவிடுகின்றேன்.உலகில் இன்று பல்வேறு உணவுகள் பல சுவைகளில் உறுவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு முக்கிய விதி என்பது இரண்டு தான்.

1.அது நமக்கு பிடித்தமான சுவையில் இருக்க வேண்டும்.

2.உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடாத சுத்தமான உணவாக அது இருக்க வேண்டும்.

இந்த இரண்டு பொதுவிதிகளுக்கும் உட்பட்ட எத்தகைய உணவானாலும் உண்ணலாம் என்பதே என்னுடைய கருத்தாகும்.இவற்றில் மாமிசம் பிரியமானவர்கள் அது தங்களின் ஆரோக்கியத்தை பாதிக்காது என்று உணர்ந்தால் அவற்றை தாராலமாக அவர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். அவ்வாறே காய்கறி வகையான உணவை மட்டுமே விரும்புபவர்கள் அது தங்களின் ஆரோக்கியத்தை பாதிக்காது என்று உணர்ந்தால் அவற்றை அவர்கள் தாராலமாக சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இவற்றிற்கு மத்தியில் உணவு கலாச்சாரம் என்றும் உணவு பாரம்பரியம் என்றும் கூறிக்கொண்டு தனக்கு விருப்பமில்லாததை மற்றவர்களும் விரும்பக்கூடாது என்றோ அல்லது தனக்கு விருப்பமானதையே எல்லோரும் விரும்ப வேண்டும் என்றோ வற்புறுத்துவது என்பது மிக இழிவான செயல் என்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
ஆக இறைச்சியோ,காய்கறியோ அவரவரின் விருப்பத்திற்கேற்பவும் அவரவரின் உடல் நிலைக்கு ஏற்பவும் தேர்ந்தெடுத்துக்கொள்வதே ஒரு சிறந்த உணவுமுறையாக இருக்குமே தவிர ஒருவருடைய உணவு பழக்கத்தை மற்றொருவரிடம் மதத்தின் பெயராலோ அல்லது கலாச்சாரத்தின் பெயராலோ புகுத்த நினைப்பது என்பது அநாகரீகத்தின் உச்சமேயன்றி வேறில்லை என்றே நான் காண்கின்றேன்.

அடுத்தபடியாக இறைச்சி என்பது பெரும்பாலும் அசுத்தமாக பார்க்கப்படுகின்றதே அப்படியானால் அனைத்து இறைச்சிகளையும் உண்ணலாமா..?என்று சிலர் கேட்கின்றனர்.எனவே அது சம்மந்தமாகவும் ஒரு சில விளக்கங்களை இங்கு பதிவு செய்வதற்கு விரும்புகின்றேன்.

அனைத்து இறைச்சிகளையும் உண்ணலாமா..?

இந்த உலகில் மனிதன் ஒன்றை தன் உணவாக எடுத்துக் கொள்வதற்கு முதல் விதியே அது சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பதையே நான் பல்வேறு இடங்களிலும் குறிப்பிட்டுவருகின்றேன்.எனவே அது இறைச்சியானாலும் சரி,அல்லது அது காய்கறியானாலும் சரி, அது சுத்தமானதாக இருந்தால் மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.மேலும் அசுத்தத்தை மட்டுமே உண்ணுகின்ற அல்லது பார்ப்பதற்கே அறுவறுப்பாக தோன்றும் பிராணிகளின் இறைச்சிகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகின்றேன்.எவ்வாறு விஷச்செடிகளை விட்டும் நாம் தவிர்ந்து கொள்கின்றோமோ அது போன்றே இத்தகைய மாமிசங்களை விட்டும் தவிர்ந்து கொள்வதும் சிறந்தது என்றே நான் கருதுகின்றேன்.

எனவே அனைத்து இறைச்சிகளையும் உண்ணலாமா என்று கேட்டால் என்னைப் பொறுத்தமட்டில் உடலுக்கு தீங்கை தரும் இன்னும் அறுவறுப்பாக காணப்படும் நிலையில் உள்ள இறைச்சிகளை தவிர்ந்து கொள்வதே சிறந்தது என்பதே எனது கண்ணோட்டமாகும்.அடுத்தபடியாக கட்டுரையின் இறுதி பகுதிக்கும் வருவோம்.அதாவது இறைச்சி என்றவுடனே இந்தியாவில் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மாட்டிறைச்சியாகவே உள்ளது. எனவே அது சம்மந்தமாகவும் இங்கு ஒருசில விஷயங்களை பார்த்துவிடுவோம்.

மாட்டிறைச்சி உண்ணலாமா..?

மாடு என்பது உண்மையில் இந்த மனித சமூகத்திற்கு பல்வேறு விதங்களில் உறுதுணையாக இருக்கும் ஒரு சிறந்த பிராணி என்பதை இங்கு முதலில் நான் நினைவூட்டிக்கொள்ள விரும்புகின்றேன்.இன்னும் சொல்லப்போனால் அது விவசாயிகள் மற்றும் பால்காரர்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு செல்லப்பிராணி என்று கூறினாலும் கூட அது மிகையாகாது என்றே நான் கருதுகின்றேன்.

அத்தகைய ஒரு பிராணியை அவர்கள் அளவு கடந்து நேசிப்பதால் அவற்றையே கடவுளாகவும் புனிதப்படுத்திப்பார்க்கின்றனர்.இது அவர்களின்  தனிப்பட்ட பிரியம் என்பதாக நாம் எடுத்துக் கொண்டாலும் அவற்றை எல்லோரும் அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று ஏனையோரையும் வலியுறுத்த நினைப்பது என்பதிலிருந்து தான்  பிரச்சனையே உறுவெடுக்கின்றது.ஏனெனில் அவர்கள் நினைப்பது போன்றே ஒரு ஆடு வளர்ப்பவர் தன் ஆட்டை அளவு கடந்து நேசிக்கின்றார் என்பதற்காக அதனை இனி யாரும் உண்ணக்கூடாது என்று கூறத்தொடங்களாம்.இது போன்றே உலகில் உள்ள ஒவ்வொரு பொருளின் புனிதத்தையும் காரணம் காட்டி ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இன்ன பொருளை உண்ணக்கூடாது என்று வற்புறுத்தத் தொடங்கினால் பிறகு உலகில் மனிதன் எதனையும் உண்ணவே முடியாமல் போய்விடுவான்.

எனவே மாட்டை நேசிப்பவர்கள் அல்லது மாட்டிறைச்சி உண்பதை வெறுப்பவர்கள் தாங்கள் அதனை செய்யாமல் தவிர்ந்துகொள்வதுதான் சிறந்ததே தவிர ஏனையோரையும் வற்புறுத்துவது என்பது அநாகரீகத்தின் உச்சம் என்பதை தயவு கூர்ந்து புரிந்துகொள்ளும்படி பணிவண்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.அவ்வாறே குறிப்பிட்ட சிலர் மாட்டை புனிதமாக பார்க்கின்றார்கள் எனில் அவர்களுக்கு முன்பு மாட்டிறைச்சியை தவிர்த்துக் கொள்வது என்பதே அதனை உண்பவர்களுக்கும் சிறந்த பண்பாக அமையும் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காண்பித்துக் கொள்கின்றேன்..!ஆக மாட்டிறைச்சி உண்ணலாமா? என்று என்னிடம் கேட்டால் அதை உண்ணுவதும் உண்ணாமல் போவதும் அவரவரின் விருப்பம் என்று தான் நான் கூறுவேன், என்றாலும் நாம் அவற்றை உண்ணுவதால் ஒருவருடைய மனம் புன்படுகின்றது என்பதை உணர்ந்தால் அச்சமயம் கட்டாயம் அதனை தவிர்ந்து கொள்வதே சிறந்தது என்றே நான் கருதுகின்றேன்.

நன்றி:

எழுத்தாளர்:

அ.சதாம் உசேன் ஹஸனி