முன்னுரை:
என்னுடைய புத்தகத்திற்கு "முழுமை பெற்ற மனிதானக இரு"என்று நான் பெயரிட்டதை வைத்து பல்வேறு நண்பர்களும் ஒரு மனிதன் முழுமை பெறுவது என்பது சாத்தியமற்ற விஷயமாயிற்றே எப்படி நீங்கள் முழுமை பெற்ற மனிதனாக இரு என்று புத்தகம் எழுதுகின்றீர்கள் என்பதாக ஆச்சர்யமாய் கேட்கின்றனர்.இன்னும் சிலர் இந்த உலகில் எந்த மனிதனும் முழுமை பெற்றவனெல்லாம் கிடையாது.எல்லோரும் இங்கு அயோக்கியர்கள்தான் யாரும் இங்கு யோக்கியரில்லை என்று ஆணித்தரமாய் கூறி முற்றிலுமாய் என்னை எதிர்க்கின்றனர்.இத்தகைய எதிர்திசைகளுக்கு விரிவான விளக்கமளிக்க ஒரு எழுத்தாளனாக இங்கு நான் கடமைபட்டிருப்பதை கட்டாயமாக உணர்கின்றேன்.அதன் அடிப்படையில் உலகில் பிறக்கும் ஒரு மனிதன் முழுமை பெறவே முடியாது என்ற முரண்பாட்டிற்கு முதலில் இங்கு விளக்கமளித்துவிடுகின்றேன்.
மனிதன் முழுமை பெறவே முடியாதா?
இந்த உலகில் இறைவனால் படைக்கப்பட்ட அல்லது இயற்கையால் உறுவாக்கப்பட்ட அனைத்துமே தன்னால் முடிந்தளவு தன்னை முழுமைபடுத்திக்கொள்வதற்காகவே உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்ற பேருண்மையை இந்த மனித சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே முதலில் இங்கு நான் சுட்டிக்காட்ட கடமைபட்டிருக்கின்றேன்.
ஆம்..!
சுருங்கிய சுருளிற்குள் சுருண்டுவிடாமல் பீரிட்டு எழுந்து,பசுமை பொழிந்து, பூக்கள் பூத்து,காய்கள் தரித்து,கனிகள் பொழிந்து பிறருக்கு குடையாகவும் தனக்கு நிழலாகவும் கம்பீரமாய் காட்சியளித்து தன்னை முழுமைபடுத்த துடிக்கும் ஒவ்வொரு செடிகொடிகளும் இதற்கு சாட்சி.!
கண்கவரும் வண்ணம் பூசி,கதைகள் கூறும் அறைகள் தொடுத்து,கட்சிதமான ஜன்னல்கள் வைத்து,அதற்கேற்ப திரை சீலையும் தைத்து,வண்ணமயமாய் காட்சிதரும் ஒவ்வொரு பூக்களும் இதற்கு சாட்சி.
இப்படி நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஒவ்வொன்றையும் கவனித்துப்பார்த்தால் அவை அனைத்தும் தன்னை தனித்துவத்தோடு செழுமைப்படுத்தி, முழுமைபடுத்தி, திருப்தியுற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை கண்ஊடாக கண்டுகொள்ளலாம்.அப்படி இருக்கையில் மனிதன் மட்டும் எப்படி தன்னை செழுமைபடுத்தி முழுமையாக்கிக்கொள்ள முடியாது என்று வாதிடமுடிகிறது என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.உண்மையில் மனிதன் முழுமை பெறவே முடியாது என்ற வாதம் இந்த உலகில் மனிதன் தறிகெட்டு தான்தோன்றித்தனமாக வாழ்வதை நியாயப்படுத்துவதற்கு வேண்டுமானால் உதவியாக அமையுமே தவிர மனித வாழ்வை மேம்படுத்தவோ அல்லது அவனை மனநிறைவான சுதந்திரத்தோடு வாழவைக்கவோ உதவாது என்பதையே நிதர்சனமாக நான் காண்கின்றேன்.
அவைமட்டுமின்றி தற்போதைய நிலையில் சுய ஒழுக்கங்களும் சமூக அக்கறைகளும் மனித வாழ்வை சிறைப்படுத்தும் பெரும் பாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.இன்னும் சொல்லப்போனால் தற்போதைய நிலையில் தனிமனித ஒழுங்கிற்கும்,சுதந்திரத்திற்குமான வேற்றுமையை புரிய வைப்பதே மிகப்பெரும் சவாலாக இருக்கின்றது.ஏனெனில் தனிமனித ஒழுங்கைப்பற்றியோ அல்லது யாருக்கும் எவ்விதத்திலும் அநீதி இழைத்துவிடாத சுதந்திரத்தைப்பற்றியோ பேசினால் அவை பழம்பெருமையாகவோ அல்லது சலிப்பூட்டும் வேடிக்கையாகவோ மட்டுமே பார்க்கப்படுகின்றது.இவை ஒருபுறம் இப்படி இருக்க மற்றொரு புறம் மது,மாது,கொலை,கொள்ளை என தறிகெட்டு,பிற மனிதர்களையும் அடக்குமுறைக்குள்ளாக்கி அநீதி இழைப்பதுதான் வாழ்வின் மிகப்பெரும் சாகசம் என்பதாக பெரும்பாலான திரைக்கதைகளால் போதிக்கப்பட்டுள்ளது. அவை பெரும்பாலன மனிதர்களால் போற்றவும்படுகின்றது.
இப்படி தற்போது எல்லா புறங்களிலும் மனித வாழ்வின் ஒழுங்கின்மையை வரவேற்பவர்களைப் பார்த்து ஒருசில கேள்விகளை இங்கு நான் கேட்க விரும்புகின்றேன்.அதாவது நீங்கள் நடத்தும் ஒரு நிறுவனத்தில் அனைத்தும் ஒழுங்கற்றதாக இருப்பதை நீங்கள் உங்களுக்காக ஏற்றுக்கொள்வீர்களா?முடியாது என்று கூறுவீர்களேயானால் பிறகு எப்படி மனிதனின் ஒழுங்கின்மையை மட்டும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகின்றது?மேலும் இந்த உலகில் எதையும் சரிசெய்ய முடியாது என்றும் இங்கு யாரும் ஒழுங்கல்ல என்றும் கூறுவதின் மூலம் இந்த மனித சமூகத்திற்கு நீங்கள் எதனை கற்றுத்தர விரும்புகின்றீர்கள்?
இந்த கேள்விகளுக்கெல்லாம் இந்த மனித சமூகத்தை தட்டழிந்து திரியச்செய்ய நினைக்கின்ற அல்லது இந்த மனித சமூகத்தை வாழ்வின் வெறுட்சியில் சுழலவைக்க நினைக்கின்ற எவரிடமும் ஒழுக்கக்கேடு என்பதை தவிர வேறு எந்த பதிலுமில்லை.ஏனெனில் அவர்கள் ஒழுங்கின்மை என்ற பாதாளக்குழிகளுக்குள் அகப்பட்டுக்கிடக்கின்றார்கள்.அவற்றிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் கடினங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். எனவே அவர்கள் மற்றவர்களையும் அதே பாதாளக்குழிகளுக்குள் இழுத்துக்கொள்ள போராடுகின்றார்கள்.
இத்தகையவர்கள் சாலையில் மூவண்ண விளக்குகள் மூலம் சாலைவிதியை கடைபிடிப்பது என்பதுகூட தேவையில்லாதது என்று உறுதியாக நம்புகிறார்கள்.ஆனால் இந்த சாலை விதிகளால் ஒவ்வொரு நாளும் பல்வேறு உயிர்கள் காக்கப்படுகின்றது என்ற பேருண்மையை சீர்தூக்கிப்பார்க்க மறுக்கின்றார்கள்.ஒன் வேயில் (One Way) எதிர்புறமாக சென்றால் மிகப்பெரும் விபத்து ஏற்படும் என்று கூறும் சாலைவிதிகள் இந்த மனித சமூகத்தை காக்கவும் அதனை நாகரீகப்படுத்தவும் உதவுகின்றது என்பதை ஏற்கமறுக்கின்றார்கள்.உண்மையில் இத்தகையவர்கள் இன்றைய சமூகத்திற்கு மிகப்பெரும் சவால் என்பதை சுட்டிக்காட்டுவதோடு இத்தகையவர்கள் மனது வைத்தால் ஒழுங்குற முழுமைபெற்று இவர்களாலும் தங்கள் வாழ்வை வாழமுடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.
இவற்றைவிடுத்து மனிதர்களுக்கு ஏன் சட்டங்கள்,விதிகள்,ஒழுங்குமுறைகள்?மனிதர்களுக்கு இவை முற்றிலும் அவசியமற்றது என்று கூறிக்கொண்டு மனித வாழ்வின் பல்வேறு புனிதங்களை குழிதோண்டி புதைத்து இந்த மனித சமூகத்தை ஒழுங்கின்மை என்னும் மிகப்பெரும் சாபக்குழியில் தள்ளிவிட நினைப்பவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நல்வழி காட்டட்டும் என்ற பிரார்த்தனையை மட்டும் இங்கு பரிசளிக்க விரும்புகின்றேன்.அடுத்த கட்டுரையில் இந்த மனிதன் தன்னை எவற்றிலெல்லாம் முழுமைபடுத்திக்கொண்டு மனநிறைவோடு வாழமுடியும் என்பதை விவரிக்கின்றேன்.
முடிவுரை:
இந்த கட்டுரையின் இறுதியாக ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதை எனது தாழ்வான கோரிக்கையாக வேண்டிக்கொள்ள ஆசிக்கின்றேன்.அதாவது மனிதனின் முழுமை என்பது சாத்தியமற்றது என்று கூறி தறிகெட்டு வாழச்சொல்வதில் மோசமான உள்நோக்கங்கள் இருக்கின்றதா? அல்லது மனிதன் தனக்காக திருப்திகரமிக்க ஒரு வாழ்வை தேர்ந்தெடுத்து தன்னை செழுமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறுவதில் மோசமான உள்நோக்கங்கள் இருக்கின்றதா என்பதை ஒரு கணம் சீர்தூக்கிப்பாருங்கள்.உங்கள் உண்மையான உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டலாம்.
நன்றி : Author.A.Sadam husain hasani
