செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

உலகிலேயே மக்கள் எங்கு அதிகம் மகிழ்சியாக வாழ்கின்றனர்?(Happiest people)

முன்னுரை:

இந்த உலகிலேயே அதிகம் மகிழ்சியாக வாழும் மக்களைப்பற்றிய ஆய்வை கொலம்பியாவின் பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் ஜஃப்ரே சாச்சஸ் மேற்கொண்டார்.அந்த ஆய்வின்போது இந்த உலகிலேயே அதிகம் மகிழ்ச்சியாக வாழும் மக்கள் (Finland)பின்லாந்த் நாட்டைச் சார்ந்தவர்களே என்று குறிப்பிடுகின்றார்.கிட்டதட்ட 5 (மில்லியன்) அதாவது 50 லட்சம் மக்கள் வாழும் அந்நாட்டிலேயே மக்கள் அதிகம் சந்தோஷமாக வாழ்கின்றனர் என்பதாக குறிப்பிடுகின்றார்.

மேலும் அவர் சந்தோஷம் என்பதற்கு மக்களின் மனதிருப்தியையே அளவுகோளாகவும் குறிப்பிடுகின்றார்.அதனடிப்படையில் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையில் மிக திருப்தியுற்றிருப்பதாகவும் மேலும் வாழ்வில் மிக மகிழ்சியாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.அங்குள்ள மக்களிடம் அவர் கருத்துக்கேட்டு சென்றபோது அம்மக்கள் என்ன கூறினார்கள் என்பதையும் அவர் பதிவுசெய்துள்ளார்.அவற்றில் சிலவற்றை இங்கு நாம் பார்ப்போம்.

ஃபின்லாந்து மக்களின் கருத்து:

"இங்குள்ள அரசே எங்களுடைய தேவையை பெரும்பாலும் தீர்த்து வைத்துவிடுகின்றது.அதனால் இங்கு எங்களுக்கு எங்களுடைய வாழ்வாதாரம் பற்றிய எந்த கவலையும் இல்லை.எங்கள் நாடு உலகிலேயே மிக வளம்நிறைந்த நாடாக இல்லை என்றாலும் எங்கள் வாழ்க்கையை மிக திருப்தியாக கழிப்பதற்கான எல்லா சுதந்திரங்களும் எங்களுக்கு இங்கு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகள் தங்களின் உற்பத்தி மற்றும் தொழில் துறையை வைத்தே தங்களை வெற்றிபெற்ற வல்லரசு நாடுகளாக காட்டிக்கொள்ள விரும்புகின்றன.ஆனால் எங்கள் நாட்டில் உற்பத்தித்துறை,ஆரோக்கியமான வாழ்வு,சமூக சுதந்திரம்,சுற்றியிருப்பவர்களின் அரவனைப்பு,அநீதி இழைப்பதை விட்டும் பாதுகாப்பு என்பதிலெல்லாம் மிகச்சிறந்த நாடாக நடைமுறை வாழ்வில் கடைபிடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.மேலும் இங்குள்ள மக்கள் சந்தோஷம் என்பது திருப்திகரமான வாழ்க்கைதான் என்பதை மிக ஆழமாக நம்புகின்றார்கள்.எனவே அவர்கள் குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் ஒருவரை ஒருவர் பொருந்திக்கொண்டு வாழ்கின்றனர்.

உண்மையில் எங்கள் நாட்டில் ஒரு குழந்தை பிறப்பதை மிகப்பெரும் வரமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.ஏனெனில் இங்கு ஒரு குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கான மூன்று மாத அனைத்து தேவைகளையும் அரசே கொடுத்துவிடுகின்றது.மேலும் அக்குழந்தையை நன்கு பராமரிப்பதற்காக தாயிற்கு 9 மாதங்கள் விடுப்பும் வழங்குகின்றது.அவ்வாறே இங்கு அதிக வரி என்பதெல்லாம் கிடையாது.கல்வியும்,மருத்துவமும் முற்றிலும் இலவசமாகும்.

இங்கு பெரும்பாலும் திருட்டு ,கொலை,கொள்ளை என்பதெற்கெல்லாம் இடமே கிடையாது,ஏனெனில் இங்குள்ள அனைவரும் நன்கு படித்தவர்கள்.மேலும் எல்லோரும் அவரவர்கள் விரும்பிய நல்ல வேலைகளிலும் இருப்பவர்கள். அதன் காரணமாக இங்குள்ள மக்களில் யாரும் யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பார்ப்பதும் கிடையாது.ஆகவே இங்கு எல்லோரும் ஏழ்மையை விட்டும் நீங்கி ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.மிக குறிப்பாக இங்கு தற்கொலைகள் என்பதற்கும் இடம் கிடையாது.ஏனெனில் இங்குள்ள மக்கள் தங்களுக்கான அனைத்து அங்கிகாரங்களையும் மிக இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர்.

இதுவே இங்குள்ள மக்கள் மிக திருப்திகரமாக வாழ்கின்றார்கள் என்பதற்கு போதுமான அளவுகொளாக இருக்கின்றது.இவ்வாறு இன்னும் பல அற்புதமான மகிழ்சி பொங்கும் பல தருனங்களை தங்கள் நாடு வழங்குவது குறித்தும் அம்மக்கள் அடுக்கிக்கொண்டே செல்வதாக தனது ஆய்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுக்காட்டுகின்றார்.

படிப்பினை:

உண்மையில் பின்லான்ட் நாட்டு அரசிடம் ஒவ்வொரு நாடும் பாடம் படிக்கவேண்டும் என்றே நான் கருதுகின்றேன்.ஏனெனில் உலகில் ஒவ்வொரு நாடும் தங்களின் நாட்டு மக்களின் திருப்தியை குறிக்கோளாக கொண்டு செயல்பட ஆரம்பித்தால் அனைத்து நாட்டு மக்களும் மிக மகிழ்சி நிறைந்த மக்களாக வாழ முடியும் என்றே நான் நம்புகின்றேன்.

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

விவசாயிகளை காப்பதற்கு வழிதான் என்ன?(How to save farmers)

முன்னுரை:

உணவு உற்பத்தியே ஒரு நாட்டின் மக்களை பஞ்சத்திலிருந்தும், பட்டினியிலிருந்தும் காப்பாற்றக்கூடியது என்பதால் விவசாயமே ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார குறியீடாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் எந்நாட்டில் உணவு உற்பத்தி என்பது வளமிக்கதாக இருக்கின்றதோ அந்நாடே உலகில் மிக செளிப்பான நாடாகவும் போற்றப்படுகின்றது.இந்தியா என்பது எவ்வாறு மக்கள் தொகையில் மிகப்பெரும் உச்சத்தை தொட்டுவிட்ட நாடாக ஏனைய நாடுகளால் கருதப்படுகின்றதோ அதே அளவிற்கு இயற்கை வழங்களாலும் நிறைந்த நாடாகவும் பார்க்கப்படுகின்றது என்பதும் நிதர்சனமாகும்.இதனைத்தான் மஹாத்மா காந்தி ஜி அவர்கள் 

"இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான் என்று குறிப்பிட்டார்."

இந்தியாவில் வேளாண்உற்பத்தி பொருட்கள் 85 % உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் மீதி 15 % வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருவது பெருமைக்குறிய விஷயமேயாகும் என்றாலும் குறிப்பிட்ட சில வருடங்களாக வேளாண்உற்பத்தித்துறையில் இந்தியா மிகப்பெரும் வீழ்சியையே சந்தித்து வருவதாக புள்ளி விவரங்கள் நமக்கு விவரிக்கின்றன.இதற்கு காரணம் என்ன என்பது குறித்தும்? ஏன் வேளாண்துறை மிகப்பெரும் வீழ்சியை சந்தித்து வருகின்றது என்பது குறித்தும், அதற்கான தீர்வு என்ன என்பது குறித்தும் இந்த கட்டுரையில் வட்டுறுக்கமாக விவரிக்க முயலுகின்றேன்.

வேளாண் துறையின் வீழ்சிக்கு காரணம் என்ன?

இன்றைய வேளாண்துறை வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமே அரசு தன் விவசாய மக்களை கண்டுகொள்ளாமல் விட்டதுதான் என்பதை என்னால் மிக உறுதியாக கூற முடியும்.ஆம்..!விவசாயிகளே இல்லாத நாட்டை உறுவாக்க நினைக்கும் அரசுதான் இதற்கு முக்கிய காரணம் என்று நான் உறுதியாக கூறுகின்றேன்.நாட்டின் பொருளாதார முதல் மதிப்பீடான விவசாயம் செய்யும் மக்களை வழுக்கட்டாயமாக வேறு தொழில்களை நோக்கி விரட்டத்தூண்டும் அரசின் சில நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்று என்னால் வெளிப்படையாகவே கூறமுடியும்.இன்றைக்கு மக்களில் பெரும்பாலானோர் விவசாயம் செய்வதை விட்டுவிட்டு வேறு தொழில்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் புதிய தலைமுறையினரோ விவசாயத்தைவிட்டும் நெடு தூரம் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.மேலும் சொல்லப்போனால் வயல்களையும்,வெளிகளையும் அவர்கள் அதிசயமாக பார்க்கும் அளவிற்கு வேற்றுகிரகவாசிகளாக்கப்பட்டுள்ளனர் என்பதே நிதர்சனமாகும்.அத்தகைய நிலையில் வேளாண் துறையை நாம் காக்கவேண்டுமானால் விவசாயிகளை காக்க வேண்டும் என்பதையே அதற்கான தீர்வாக நான் காண்கிறேன். அவர்களை காப்பதற்கு அவர்கள் ஏன் விவசாயத்தை விட்டும் தூரமாகின்றனர் என்பது குறித்தும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருதுகின்றேன்.

எனவே விவசாயிகள் ஏன் விவசாயத்தை விட்டும் தூரமாகின்றனர் என்பது சம்மந்தமாக ஒரு சில விஷயங்களை இங்கு நான் விவரிக்க விரும்புகின்றேன். விவசாயத்தில் இரவு பகல் பாராத அதிக உழைப்பும்,உறுதியற்ற வருமானமும் இருப்பதாலேயே பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்வதை விட்டுவிடுகின்றனர் என்பது எனது கண்ணோட்டமாகும்.ஆம் மக்களின் உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லையெனில் எவ்வாறு அவர்கள் அத்துறையில் நிலைத்திருப்பார்கள்?

எனவே அவர்கள் பணம் எங்கு அதிகம் கிடைக்கின்றதோ அந்த துறைகளை நோக்கி சப்தமின்றி நகர்ந்துகொண்டே இருக்கின்றார்கள் என்பதே எனது கருத்தாகும்.அவ்வாறே அவர்கள் கடனுக்கும் வட்டியிற்கும் பணம் பெற்று அதனை முதலீடு செய்யும் விவசாயம் அவ்வப்பொழுது இயற்கை சீற்றங்களால் முற்றிலும் நாசமடைந்து போகும்பொழுது அவர்கள் நிர்கதியற்று நிற்க வைக்கப்படுகின்றனர்.இதனால் ஏன் இந்த தலைவலி பிடித்த தொழிலை கட்டி மாரடிக்கவேண்டும் என்று விவசாயத்தை வெளிப்படையாகவே தூக்கி எறிந்துவிட முற்படுகின்றனர்.

என்னை பொருத்தமட்டில் அவர்களின் எண்ணம் தவறானதல்ல என்றே நான் கூறுவேன்.ஏனென்றால் இரவு பகலாக ஓடாய் உழைக்கும் ஒரு மனிதனுக்கு எவ்வித பலனுமே கிடைக்கவில்லையெனில் அவன் அத்தொழிலிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்று ஆசிப்பது எவ்வாறு நியாயமாகும்..?எனவே அவனுடைய உழைப்பிற்கான உறுதியான ஒரு பலனை அரசு உறுதி செய்வது மட்டுமே அவன் விவசாயத்தில் நீடிப்பதற்கான தீர்வாக அமையும் என்பது எனது கண்ணோட்டமாகும்.

நூறு நாட்கள் தாண்டியும் இன்றும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத் திற்கான உறுதியை வேண்டி டெல்லியில் போராடிக்கொண்டு தானிருக்கின்றனர்.ஆனால் அவர்களின் விஷயத்தில் அரசு திரும்பிப் பார்ப்பதற்குகூட தயாராக இல்லை என்பது எத்துணை பெரிய அவளம் என்பதை இங்கு நான் சுட்டிக்காட்ட கடமைபட்டிருக்கின்றேன்.இத்தகைய அரசைத்தான் முதலாளித்துவ அடிமை அரசு என்று மார்க்ஸ் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.

ஏனெனில் பணம் என்பது உழைப்பாளர்களின் உற்பத்தி வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது.அதனை உழைப்பாளிகளை சுரண்டிப்பிளைக்க நினைக்கும் அற்பர்களிடம் அச்சடித்து கொடுத்துவிட்டு ஏழை விவசாயிகளை அந்த பணத்தை நோக்கி ஓடவிடுவது என்பது மிகப் பெரும் அனாகரீகம் என்றே நான் பார்க்கின்றேன்.நாட்டின் உற்பத்தி குறைந்து கொண்டே செல்கின்றது என்று நாடாலுமன்றங்களில் கூக்குரல் இடும் இந்த கயவர்கள் ஏன் விவசாயிகளுக்கென்ற வாழ்வாதார உறுதியை கொடுக்க மறுக்கின்றனர் என்று யோசிப்பீர்களேயானால் அங்குதான் முதலாளித்துவ அடிமை சேவகம் ஒழிந்திருக்கின்றது என்பதை புரிந்து கொள்வீர்கள்.

ஏற்பிடித்து கழப்பை பிடித்து உழைக்கும் ஒருவனின் வியர்வைக்கு தகுந்த வருமானத்தை அரசு உறுதிசெய்யவில்லையெனில் அந்த அரசு எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும்..?அதுமட்டுமல்லாது இரவு பகலாக பயிரிட்ட அவனது பயிற்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அமோக லாபம் பெறத்துடிக்கும் முதலாளிகளின் கைகளை எவ்வித கட்டுப்பாடுமின்றி கட்டவிழ்த்துவிட்டு விட்டு நாட்டில் உற்பத்தி குறைந்துவிட்டது,எனவே விலவாசி உயர்ந்துவிட்டது என்று ஓழமிடுவது எத்துனை பெறிய பித்தலாட்டம்.. இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கின்றேன்..!விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு..!அவர்களை முறித்துவிட்டு நாட்டின் முன்னேற்றத்தை எதிர்பார்த்தால் இந்நாடு கூன் விழுந்த கிழவியாகவே நாதியற்று இறந்து போகும் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்..!

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

காரல் மார்க்சும் அவருடைய அரசியல் பார்வையும்-Karl Marx

முன்னுரை:

இந்த கட்டுரையில் கார்ல்மார்க்சின் அரசியல் சார்ந்த அடிப்படை கண்ணோட்டத்தை மேலோட்டமாக பதிவு செய்திருக்கின்றேன்.ஏனெனில் இன்றைக்கு அரசியல்,அதிகாரம் என்ற பெயரில் மக்களை சுரண்டி பிளைக்கத்துடிக்கும் புள்ளுருவிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை காரல் மார்க்சின் சில அடிப்படை தத்துவங்கள் தோழுறித்துக் காட்டக்கூடியதாக இருக்கின்றது என்ற அடிப்படையில் இங்கு அவருடைய அரசியல் சார்ந்த சில கண்ணோட்டத்தை விவரிக்கின்றேன்.

அரசியலின் அடிப்படை தத்துவமென்ன என்பதையும் அதன் சாதக பாதகங்கள் என்ன என்பதையும் மிகச்சரியாக நாம் விளங்கிக் கொள்ளவில்லையெனில் வலியவன் நம்மை ஆளவும் எளியவனாகவே நாம் துவளவும் பழகிப்போய்விடுவோம்.அத்தகைய இழிநிலையை ஒழிக்கவே பல்வேறு தலைவர்கள் தன் வாழ்நாட்கள் முழுவதும் போராடினார்கள்.அத்தகைய போராளிகளில் ஒருவரான கார்ல் மார்க்சின் ஒரு சில கருத்துக்களை உங்களின் கண்ணோட்டத்திற்கு விடுகின்றேன்.இதனை கட்டாயம் வாசியுங்கள்..!ஏனைய வாலிப நண்பர்களுக்கும் இதனை எத்திவையுங்கள்.. 

கார்ல் மார்க்சிடம் அரசியல் அல்லது அரசு என்பதற்கு பொருள் என்னவென்றால் அதிகாரத்தை தன் கையில் மட்டும் குவித்துக்கொண்டு தனக்கு இனக்கமானவர்களுக்கு சேவகம் செய்வதும் தனக்கு தேவையற்றவர்களுக்கு ஓரவஞ்சகம் செய்வதும்தான் என்று தன்னுடைய பெரும்பான்மையான பேச்சுகளில் வெளிப்படுத்துகின்றார்.வெளிப்படையாக கூறவேண்டுமெனில் முதலாளித்துவம் ஒழிந்துகொள்வதற்கும் அவற்றின் மூலம் பாட்டாளி மக்களை உறிஞ்சி குடிப்பதற்கும் துணைநிற்கும் ஒரு அமைப்புதான் அரசு என்று மிக ஆணித்தரமாக குறிப்பிடுகின்றார்.ஆக அவருடைய பார்வையில் அரசு என்பதற்கான அடைமொழி என்னவென்றால்..! 

"முதலாளிகளால் முதலாளிகளுக்காக முதலாளிகளே உறுவாக்கிய அரசுதான் அரசியல் என்று முகத்தில் அறைந்தார் போல் விளக்கம் தருகின்றார்.அரசு அரசியல் என்பதெல்லாம் தேவையே இல்லாதவை என்பதிலிருந்தே அவரின் அரசியல் கண்ணோட்டம் துவங்குகின்றது.மக்கள் தங்களுக்கு தாங்களே சீராகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டாலே போதுமானது என்றே அவர் பல இடங்களில் குறிப்பிடுகின்றார்.அப்படியே ஒரு வேலை தங்களுக்கு மத்தியில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதனை அவர்கள் தங்களுக்கு மத்தியிலேயே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் தீர்வு கூறுகின்றார்.

மேலும் மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த அரசு, அரசாங்கம் என்பவையெல்லாம் இல்லாமலே வாழ்ந்துதானிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காண்பிக்கின்றார்.ஆனால் குறிப்பிட்ட ஒரு காலத்தில் மக்களுக்கு மத்தியில் தீர்க்க முடியாத வர்க்க பிரச்சனைகள் தோன்றியதால்தான் இந்த அரசு,அரசாங்கம் என்ற நடுவன் மன்றங்களெல்லாம் உறுவானது என்று குறிப்பிடுகின்றார்.இன்னும் சொல்லப்போனால் தங்களை தனித்தனி வர்க்கங்களாக பிறித்துப் பார்க்கும் மக்களுக்கு மத்தியில் இணங்க முடியாத வர்க்க பிரச்சனையை தோற்றுவித்ததே இந்த அரசியல் அரசு புள்ளுருவிகள்தான் என்றும் குற்றம் சாட்டுகின்றார்.

மேலும் இந்த வர்க்க பிரச்சனைகள் இல்லாவிடில் அரசு என்பதே இல்லாமல் போய்விடும் என்பதே அவருடைய ஆழமான கருத்தாகவும் இருக்கின்றது.இந்த வர்க்க பிரச்சனையை மக்களிடம் அவ்வப்பொழுது தூண்டிவிட்டு தனக்கான அதிகார பலத்தை அவ்வப்பொழுது மெருகூட்டிக் கொண்டே இருப்பதுதான் அரசு என்ற ஒன்று நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது என்பதையும் அவர் மிகத்தெளிவாக விவரிக்கின்றார்.மேலும் அவரிடம் அரசு என்பதற்கும் மக்களை சுரண்டி பிளைக்கத்துடிக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை அவரின் கருத்தை ஆழமாக வாசிக்கும்பொழுது நன்றாக புரிந்துகொள்ளலாம்.

அவரை பொறுத்தமட்டில் முதலாளித்துவத்தையும்,அரசியலையும் ஒரே தட்டில் வைத்தே அளவிடுகின்றார்.ஏனெனில் முதலாளித்துவமும்,அடிமை அரசும் ஒன்று சேர்ந்தால்தான் உழைக்கும் எளிய மக்களின் இரத்தங்களை உறிஞ்ச முடியும் என்பதையும் அவர் வெளிப்படையாகவே விவரிக்கின்றார்.மேலும் அவர்கள் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக செய்யும் அட்டூழியங்களையும் பட்டியலிடுகிறார்.பிறகு அவற்றை ஒழித்துக்கட்ட அவரே முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான ஒரு அரசியலையும் முன் வைக்கின்றார்.

அதற்கு பெயர் தான் "பாட்டாளி மக்கள் கட்சி".என்பதாகும்.அவ்வாறே கார்ல் மார்க்ஸ் அரசியலுக்கும் அரசாங்கத்திற்கும் எதிரானவர் என்றும் முடிவெடுத்துவிட முடியாது என்பதே எனது கருத்தாகும்.ஏனென்றால்  அவரின் "பாட்டாளி மக்களுக்கான அதிகாரம் வேண்டும் என்ற உரிமை முழக்கமே பறைசாட்டுகின்றது அவர் அரசியலுக்கு எதிரானவர் அல்ல என்று. இன்னும்சொல்லப்போனால் இங்குள்ள எல்லோருக்கும் அரசியல் தேவை என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.ஆனால் அந்த அரசு யாருக்கானதாகவும்,எப்படிப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அவர் நேரடியாகவே உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டித்திண்க நினைக்கும் முதலாளி வர்க்கத்தோடு முரன்பட்டு நின்றார்.

மேலும் அரசு என்ற பெயரில் ஏதோ ஒரு வர்க்கத்தை நசுக்கி சிற்றின்பம் கண்டுகொண்டு தன் அதிகார பலத்தை ஏனைய மக்களிடம் காட்டிக் கொள்ளத்துடிக்கும் புள்ளுறுவிகளுக்கு எதிராக விவேகத்தோடு கோள் ஓச்சினார்.எளிய மக்களை சுரண்டித்திண்ணும் பெரிச்சாலிகளை விட்டு விட்டு எளிய சிறுபான்மையினரை தன் அதிகாரத்தால் அடக்கி வைத்திருப்பதாக பெருமைகொள்ளும் இழிவான அரசை நேரடியாகவே எதிர்த்து நின்றார். இறுதியாக முதலாளித்துவதின் அடக்குமுறைக்கும் அதற்கு துணை நிற்கும் அடிமை அரசுக்கும் எதிராக வெளிப்படையாகவே பாட்டாளி மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று தூண்டி வெற்றியும் கண்டார்.

உழைக்கும் மக்களுக்கென்று தனி அதிகாரம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்றும் கொள்கை வகுத்தார்.இன்றைக்கு பல்வேறு நாடுகளிலும் அவர் காட்டித்தந்த வழிமுறைகள்தான் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது என்றால் அது மிகையாகாது என்றே நான் கருதுகின்றேன்.அவ்வாறே "உழைக்கும் மக்களிடமே ஆட்சியும் அதிகாரமும் இருக்க வேண்டும் என்பதை தன் அரசியல் முழக்கத்தின் மூலம் நிறூபித்தும் காண்பித்துவிட்டு சென்றுள்ளார்.

ஆக அன்பர்களே...!கார்ல் மார்க்ஸ் அடிமை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை சில தீர்வுகளோடு விவரித்து இருக்கின்றார்.அவை முழுவதையும் இங்கு நான் சுட்டிக்காண்பிப்பது இயலாத விஷயமாகும்.எனவே அவருடைய அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தை மட்டும் என்னால் முடிந்தளாவு புரிந்துகொண்டு மிக வட்டுறுக்கமாக உங்களின் பார்வைக்கு தந்திருக்கின்றேன்.முடிந்தால் இன்றைய அரசியலோடு நீங்களே அவருடைய அரசியல் நிலைப்பாட்டை முன்நிறுத்திப்பாருங்கள்.அவர் முதலாளிகளுக்கோ முதலாளித்துவத்துக்கோ எதிரானவர் அல்ல,மாறாக மக்களை அதிகாரத்தாலும்,பொருள் பலத்தாலும் அடக்கி ஆளத்துடிக்கும் புள்ளுருவிகளுக்கே அவர் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தார் என்பதை மிகத்தெளிவாக புரிந்துகொள்ளலாம் என்று நான் நம்புகின்றேன்.

கார்ல் மர்க்ஸ் எழுதிய அல்லது அவரைப்பற்றி எழுதப்பட்ட புத்தகம் உங்களில் யாருக்கேனும் வேண்டுமெனில் இந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மெயிலிற்கு உங்களின் குறுஞ்ச் செய்தியை அனுப்புங்கள்.அவை இலவசமாக PDF வடிவில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

புதன், 4 ஆகஸ்ட், 2021

அரசியலும் பொருளாதார கொள்கைகளும்.(Capitalism, Socialism, Communism)


 

முன்னுரை:

ஒரு நாட்டில் ஒரு அரசு எத்தகைய பொருளாதார கொள்கையை கடைபிடிக்கின்றதோ அதனை பொருத்தே அந்நாட்டின் பொருளாதார வளர்சியும் அமைகின்றது என்பது நிதர்சனமாகும்.எனவே நாட்டின் பொருளாதார வளர்சியை கருத்தில்கொண்டு இன்றைய உலகில் மூன்று விதமான பொருளாதார கொள்கைகளே அனைத்து அரசுகளாலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.அம்மூன்று பொருளாதார கொள்கைகளையும் அனைவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணமாக மிக எளிய உதாரணங்களால் என்னால் முடிந்தளவு விவரிக்க முயலுகின்றேன்.

பொருளாதாரக் கொள்கைகள்:

1.கம்யூனிச பொருளாதாரக் கொள்கை.

2.கேப்பிடலிச பொருளாதாரக் கொள்கை.

3.சோசியலிச பொருளாதாரக் கொள்கை.

1.கம்யூனிச பொருளாதார கொள்கை என்றால் என்ன ?

கம்யூனிச பொருதார கொள்கை என்பது நாட்டில் கிடைக்கப் பெறும் பொருளை அனைவரும் சரிசமமாக பிரித்துக் கொள்வதற்கு சொல்லப்படும். உதாரணமாக கூறினால் பண்டைய காலத்தில் உணவிற்காக வேட்டையாடும் பொருளை அனைவரும் பங்கு பிறித்து எடுத்துக் கொள்வதை போன்றதாகும்.

2.கேப்பிடலிச பொருளாதார கொள்கை என்றால் என்ன?

 நாட்டில் கிடைக்கப் பெரும் பொருளை யார் எடுத்தாரோ அவரே அதற்கு முழு உரிமை பெறுவார் என்பதாகும்.இதற்கு உதாரணம் யார் உணவை வேட்டையாடினாரோ அவரே அதனை வைத்துக்கொள்ளலாம் என்பதை போன்றதாகும்.

3.சோசியலிசம் என்றால் என்ன.?

நாட்டில் கிடைக்கப்பெறும் பொருளை மக்களின் தேவைக்கு ஏற்பவாறு அரசே பங்கிட்டு கொடுப்பதற்கு சொல்லப்படும்.உதாரணமாக வேட்டையாடிய பொருளை அரசு தன் கையில் எடுத்து அதனை அவரவரின் தேவைக்கேற்ப வழங்குவதை போன்றதாகும்.இவற்றில் ரஷ்யா,சீனா போன்ற பெரும் நாடுகள் கம்யூனிச பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளாகவும், அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகள் கேப்பிடலிச பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளாகவும்,இந்தியா போன்ற சில நாடுகள் சோசியலிச பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளாகவும் மேலோட்டமாக பார்க்கப்படுகின்றது.

இப்பொழுது இம்மூன்று கொள்கைகளில் எக்கொள்கை மக்களின் பொருளாதார வளர்சிக்கு மிக உதவியாக இருக்கும் என்பதை என்னுடைய கண்ணோட்டத்தில் விவரிக்க விரும்புகின்றேன்.

எது சிறந்த கொள்கை?

என்னைப்பொருத்தமட்டில் இம்மூன்று கொள்கைகளையும் வரம்பு மீறாமல் கடைபிடிப்பதே ஒரு நாட்டு மக்களின் பொருளாதார வளர்சிக்கு காரணமாக அமையும் என்று நான் நம்புகின்றேன்.நாட்டில் ஒருவன் அதிகம் உழைக்கின்றான் எனில் அவனுக்கு அப்பொருளில் கூடுதல் உரிமை கொடுப்பதில் தவறேதும் கிடையாது என்பதே எனது கண்ணோட்டமாகும். இதனடிப்படையில் கேப்பிடலிசம் என்பதும் ஒரு நாட்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய சிறந்த பொருளாதார கொள்கையாகவே நான் காண்கின்றேன். ஏனெனில் ஒருவன் மட்டும் உழைத்து பலரும் சரிசமமாக பிறித்துக்கொள்வது என்பது ஒரு காலத்தில் மிகப்பெரும் அடக்குமுறைக்கு காரணமாகவும் அமையலாம் என்பதும் எனது கருத்தாகும்.

அவ்வாறே இல்லாத ஒருவனுக்கு பகிர்ந்து அளிப்பது என்பதும் மிகச்சிறந்த செயலேயாகும்.ஏனெனில் ஏதுமில்லாத ஒருவனுக்கு ஏதேனும் சில பொருட்களை கொடுத்து உதவுவது என்பது அவனுக்கு புதிய வாழ்வை அமைத்து கொடுப்பதைப்போன்றதுதானே.!இதனடிப்படையில் கம்யூனிசம் என்பதும் ஒவ்வொரு நாட்டிற்குமான சிறந்த பொருளாதார கொள்கையாகவே காணப்பட வேண்டும் என்பதும் எனது கண்ணோட்டமாகும்.

அவ்வாறே அத்தியாவசிய பொருட்களை அரசே பொறுப்பேற்று அதை சீராக பங்கிடுவதும் ஒரு நாட்டின் பொருளாதார நிலையை பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறையேயாகும்.ஏனெனில் அத்தியாவசிய பொருட்களை முதலாளிகளின் கையில் கொடுத்துவிடுவதோ அல்லது மக்களின் கைகளிலேயே விட்டுவிடுவதோ பொருளாதார தட்டுப்பாட்டிற்கு காரணமாக அமைந்துவிடலாம்.எனவே இதனடிப்படையில் சோசியலிசமும் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையான சிறந்த பொருளாதார கொள்கையாகவே இருக்கின்றது.

(குறிப்பு)இங்கு மிக முக்கியமான விஷயம் என்னவெனில் எப்பொழுது இவை மூன்றிலும் வரம்பு மீறப்படுமோ அப்பொழுதே அந்நாட்டின் பொருளாதார கட்டமைப்பும் சீர்கெட்டுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

ஆரோக்கியமே ஒரு மனிதனை முழுமைபடுத்துகின்றது..!(Be healthy)



உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமே இவ்வுலகின் மிகச் சிறந்த செல்வம் என்பதாகவே இவ்வுலகில் உள்ள அத்துனை மதங்களும் அதன் தலைவர்களும் போதித்துவிட்டு சென்றுயிருப்பதை நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.ஆம் காந்தி ஜீ: "இந்த உலகில் தங்கம்,வெள்ளியை விட உண்மையான செல்வம் அது ஆரோக்கியம் மட்டுமே என்று கூறியிருக்கின்றார்.அவ்வாறே நபிகள் நாயகம்:"இந்த உலகில் இறைவனிடம் கேட்க வேண்டிய முதல் செல்வம் அது ஆரோக்கியமே "என்பதாக கற்றுக் கொடுத்ததாகவே வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது.

இவ்வாறே புத்தரும் "உடல் ஆரோக்கியமே உலகின் மிகச்சிறந்த செல்வம்' என்பதாக போதித்திருப்பதையும் நம்மால் காணமுடிகின்றது.இப்படி உடல் ஆரோக்கியத்தின் மேன்மையை உணர்ந்த அந்த மஹான்கள் எல்லோரும் இந்த உலகில் ஒரு முழுமைபெற்ற மனிதர்களாகவே தங்களை நிலைநாட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

உண்மையில் இந்த உலகில் மனிதர்களை இரண்டே வகையில் நாம் உள்ளடக்கிவிடலாம்.ஒன்று நோய்வாய்பட்டு தன்னுடைய ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்காக போராடும் ஒரு சாரார்கள்,மற்றொன்று தன்னுடைய ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் மற்றொறு சாரார்கள்.இவ்விரண்டு சாரார்களில் நீங்கள் எந்த சாரார்களில் இருக்கின்றீர்கள் என்பதை ஒரு கனம் சீர் தூக்கிப்பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆக ஆரோக்கியத்தை எப்பது பாதுகாப்பது என்பது சம்மந்தமாக பார்ப்பதற்கு முன்பாக முதலில் ஆரோக்கியம் என்றால் என்ன என்பது குறித்து பார்த்துவிடுவோம்..!

ஆரோக்கியம் என்றால் என்ன.?

"நாம் விரும்பியவாறு சுதந்திரமாக செயல்படும் நிலைக்குத்தான் ஆரோக்கியம் என்று சொல்லப்படும்.ஆம் உடல் ரீதியாக நாம் சுதந்திரமாக செயல்படும் அந்த காலம்தான் நம் வாழ்வில் கிடைக்கப்பெற்ற வசந்த காலம். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அதிகப்படியாக ஆசிப்பது இந்த சுதந்திர காலத்தைத்தான்.தான் விரும்பிய எதனையும் எவ்வித தங்குதடையுமின்றி சுதந்திரமாக செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கும் தனிப்பட்ட பேராசையாகும்.பெரும்பாலான மனிதர்களுக்கு அது வெறும் பேராசையாகவே கடந்து சென்றுவிடுகின்றது.

இந்த கட்டுரையில் நான் உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கான சில வழிமுறைகளை குறிப்பிட்டாலும் அவற்றைவிட உங்களிடம் நான் வேண்ட நினைப்பதெல்லாம் ஒன்றுதான் "உங்கள் உடல் ஆரோக்கியம் உங்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை  நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்" என்பதேயாகும்.ஆம்..!உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளும்படி ஒவ்வொரு சமயமும் ஒருவர் உங்களுக்கு போதித்துக் கொண்டே இருக்கும் நிலையை தயவுகூர்ந்து  நீங்கள் அடைந்துவிடாதீர்கள். உண்மையில் அதைக்காட்டிலும் துரதிஷ்டமான  நிலை வேறெதுவுமில்லை.

ஆகவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதே உங்கள் வாழ்வின் முதல் இலட்சியமாக தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.ஏனென்றால் நீங்கள் உடல் ஆரோக்கியமற்றுப்போகும்பொழுது நீங்கள் உங்களுடைய சுதந்திரத்தை இழப்பது மட்டுமின்றி உங்களை சுற்றியிருப்பவர்களின் சுதந்திரத்தையும் இழக்கச்செய்துவிடுவீர்கள்.இதற்கு நல்ல உதாரணம் குருடர்கள்தான்.அவர்கள் எல்லா காலமும் மற்றொரு மனிதரின் பக்கம் தேவையுற்றவர்ளாகவே ஆகிவிடுகின்றனர்.மேலும் இந்த அற்புதமான உலகின் பரந்து விரிந்த பாலைகளையும்,சோழைகளையும் பார்த்து ரசிக்கும் பாக்கியமற்று தனித்து விடப்பட்ட, இருண்ட உலகில் தத்தளிக்கும் வெற்று சடலங்களாக மாறிவிடுகின்றனர்.ஆக அந்த குருடர்களின் நிலையே ஆரோக்கியத்தின் உண்மை பொருளையும்,அவசியத்தையும் மிகத்தெளிவாக விளக்குகின்றது என்பதால் இந்த சிறு உதாரணத்துடனே இக்கட்டுரையின் அடுத்த கட்டத்திற்கு நான் செல்கின்றேன்.

உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணிக்காப்பது..?

உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்கு நாம் எல்லா காலங்களிலும் கடைபிடிக்க வேண்டிய நான்கு முக்கிய வழிமுறைகளை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

ஆரோக்கியத்தை காப்பதற்கான வழிகள்:

1.Having Food -உணவு முறை

2.Having Rest -ஓய்வு எடுத்தல்

3.Doing exercise -உடற்பயிற்சி செய்தல்

4.Beeing cleanliness -தூய்மை கடைபிடித்தல்.

1.நம் உடல்நலனை பேணிப்பாதுகாக்க முதல் காரணியாக இருப்பது நம் உணவு சார்ந்த பழக்கவழக்கமாகவே இருக்கின்றது.ஆகவே அவற்றைப்பற்றியே  இங்கு நான் முதலில் விளக்குவதற்கு விரும்புகின்றேன். உணவு சார்ந்த பழக்கவழக்கத்தை நாம் இங்கு இரண்டு பகுதிகளாக பிறித்துக்கொள்ளலாம்.

1.நாம் நமக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய உணவு.

2.நாம் நம்மைவிட்டும் தவிர்த்துக் கொள்ள வேண்டிய உணவு.

நாம் நமக்காக தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உணவு நாம் உண்ணுவதற்கு தகுதியானதுதானா என்பதை எல்லா சமயங்களிலும் ஒன்றிற்கு பலமுறை சோதித்துப்பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.அது எவ்வாறு சோதித்துப்பார்ப்பது? என்பதாக நீங்கள் கேட்டால்..!அதற்கான இரு பொது விதிகளையும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

1.அவை சுத்தமானதாக இருக்க வேண்டும்.

2.அவை சுவையானதாக இருக்க வேண்டும்.

இந்த இரண்டு விதிகளுக்கும் அப்பாற்பட்ட உணவுகளை எப்பொழுதும் தவிர்த்துவிடுவதே நம் ஆரோக்கியத்தை பேணிக்கொள்வதற்கான ரகசிய சூட்சமமாகும்.ஆம் ..!சுத்தமற்ற உணவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை தாக்கும் முதல் எதிரி என்பதை ஒருபொழுதும் மறந்துவிடாதீர்கள்.குறிப்பாக வயிற்றுப்போக்கு,வாந்தி பேதி போன்ற நோய்கள் ஏற்பட சுகாதாரமற்ற ஃபாஸ்ட் புட் உணவுகளே முக்கிய காரணியாக இருக்கின்றது என்பதாகவே மருத்துவர்களில் பலரும் குறிப்பிடுகின்றனர்.

அவ்வாறே தெருக்களின் ஓரமாக திறந்த வெளிகளில் விற்கப்படும் தின்பண்டங்களாலேயே காலரா,மற்றும் டைஃபாய்டு,போன்ற வைரஸ் காய்ச்சல்களும் பரவுகின்றது என்பதாகவே மருத்துவர்கள் நமக்கு எச்சரிக்கின்றனர்.ஆகவே உங்களால் முடிந்த அளவு சுகாதாரமான உணவுகளையே உங்களுக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக சுவையான உணவை நாம் நமக்காக தேர்ந்தெடுத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்துவதில் எவ்வித தவறும் கிடையாது.நம்மில் பலரும் விலையுயர்ந்த உணவு பொருட்களை அதிக தொகைகொடுத்து வாங்க தயாராகவே இருக்கின்றோம்.ஆனால் அவை நம்முடைய உடல்நலத்தை காக்கும் சுவைமிக்கதுதானா.?என்பதை கவனிக்க பல சமயங்களில் தவறிவிடுகின்றோம்.

வெறும் அயல் நாட்டு உணவு என்ற பெயரிற்காகவே அதனுடைய சுவை மற்றும் அதன் விளைவு போன்றவற்றை மறந்துவிட்டு அதிக விலை கொடுத்து உண்ணுகின்றோம்.அவை மிக காரம் நிறைந்து,நம் மனதிற்கு பிடிக்காத சுவையில் இருந்தாலும் அவற்றை பற்களை கடித்துக் கொண்டு விழுங்கி விடுகின்றோம்.இவற்றிற்கு மாறாக நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளை மிக சுவையாக சமைத்து உண்ணுவதையே நம் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்கான  மிகச்சிறந்த வழி என்பதாக நான் முழுமையாக நம்புகின்றேன்.

மேலும் மற்றொரு விஷயத்தையும் இங்கு நான் சுட்டிக்காண்பிப்பதற்கு கடமைபட்டிருக்கின்றேன்.அதாவது நம்மில் பலரும் ஆரோக்கியத்தை பாதுகாக்கவேண்டுமானால்,பாதி அவியல் கொண்ட சுவையற்ற உணவையே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் உண்மை என்னவெனில் பாதி அவியலான உணவு அதிக சத்துக்களை கொண்டதாக கருதப்பட்டாலும் அவற்றை முறையாக,முழுமையாக சமைத்து உண்ணும்பொழுது அதனுடைய முழு சக்தியும் கிடைக்கவே செய்கின்றது என்பதாகவே மருத்துவர்களில் பலரும் குறிப்பிட்டுகாட்டுகின்றனர்.

ஆகவே சுத்தமான மேலும் சுவையான உணவை உங்கள் மனதிற்கு பிடித்த வகையில் உண்டு மகிழுங்கள்.மேலும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் மட்டுமே முழு பொறுப்புடையவர்கள் என்பதை ஒருபொழுதும் மறந்துவிடாதீர்கள்.

2.தவிர்த்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள்.

உண்ணக்கூடாத உணவு என்பது அசுத்தம் நிறைந்த பார்ப்பதற்கே அறுவறுப்பாக தோன்றுகின்ற அனைத்து விதமான உணவுகளையும் முடிந்தளவு தவிர்த்துவிடுங்கள்.குறிப்பாக போதை தரும் பொருட்களில் எதுவாக இருந்தாலும் அவற்றை முற்றிலுமாக தூரமாக்கிவிடுங்கள்.அவ்வாறே அசுத்தமான கால்நடைகளின் இறைச்சிகளையும் முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்.அவை மிக உயர்ந்த சுவையில் சமைக்கப்பட்டிருந்தாலும் சரியே.மது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை உறிந்து குடித்துவிடும் மிக மோசமான எதிரி என்பதை எக்காலமும் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்வின் எச்சந்தர்ப்பங்களிலும் அவை இடம் பிடித்துவிடாதபடி உங்களைச் சுற்றி ஒரு அரண் அமைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் ஆரோக்கியம் நிச்சயம் நீடித்து இருக்கும் என்பதை நான் வாக்குறுதி அளிக்கின்றேன். இவற்றைப் போன்று நம் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களை  "முழுமை பெற்ற மனிதனாக இரு"என்ற எனது புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கின்றேன்.அவற்றை கட்டாயம் வாசியுங்கள்.உங்களை முழுமை பெற்ற மனிதராக ஆக்கிக் கொள்ளுங்கள்.